சேலம்
முருங்கப்பட்டி ஊராட்சியில் 125 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
மக்கள் சந்திப்பு
சேலம் அருகே உள்ள முருங்கப்பட்டி ஊராட்சியில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. இதையொட்டி மாவட்ட நிலையிலான அலுவலர்கள் அடங்கிய குழுவினர் நேரடியாக முருங்கப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடம் குறைகள் மற்றும் குடிநீர் வசதி, சாலை வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் மற்றும் பல்வேறு பொதுப்பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தனர்.
மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் பல்வேறு துறைகளின் மூலம் 125 பயனாளிகளுக்கு ரூ.39 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
கண்காட்சி
இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., ராஜமுத்து எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார், மகளிர் திட்ட இயக்குனர் பெரியசாமி, வீரபாண்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வருதராஜ், அட்மா குழு தலைவர் வெண்ணிலா சேகர், முருங்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பூங்கோதை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.