திருச்சி,
திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற மத்திய அரசின் விழாவில் சுமார் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார். குறிப்பாக பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, சாலைகள், ரெயில்வே மற் றும் பல துறைகளை உள்ளடக்கிய வளர்ச்சி திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
திட்டங்கள் விவரம்:-
* நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சுமார் ரூ.3,680 கோடி முதலீட்டில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் நகர எரிவாயு வினியோக வலையமைப்பிற்கு அடிக்கல் நாட்டினார்.
* சென்னையில் உள்ள மணலியில், ஆண்டுக்கு 672 ஆயிரம் மெட்ரிக் டன் திறன் கொண்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் மசகு எண்ணெய் கலவை ஆலையையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். சுமார் ரூ.1,490 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆலை, இந்தியாவின் மசகு எண்ணெய் உற்பத்தித் திறனை வலுப்படுத்தும்.
* பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 370 கி.மீ நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
* தேசிய நெடுஞ்சாலை எண்.81-ல் கங்கைகொண்ட சோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
* மேலும் நாகர்கோவில்-சார்லபள்ளி, போத்தனூர்-தன்பாத் அம்ரித் பாரத் விரைவு ரெயில்கள், ராமேசுவரம்-மங்களூரு சென்டிரல், திருநெல்வேலி-மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் மயிலாடுதுறை - திருவாரூர்-காரைக்குடி பயணிகள் ரெயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திட்டங்களின் பயன்கள்:-
சுத்தமான எரிபொருள், தூய்மையான வாழ்க்கை: பி.என்.ஜி, மற்றும் சி.என்.ஜி. மூலம் நீலகிரி மற்றும் ஈரோட்டில் சுமார் 30 இலட்சம் மக்களுக்கு பாதுகாப்பான சமையல் மற்றும் போக்குவரத்து
எதிர்காலத்திற்கு உகந்த சூழ்நிலை: கார்பன் டை ஆக்ஸைடின் உமிழ்வை 24% குறைத்து, காற்றின் தரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரங்கள்: 22 லட்சத்திற்கும் அதிகமான மனித நாட்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி, உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.
உலகளாவிய தொழில்துறை திறன்: சென்னை மணலியில் உள்ள உலகின் 2வது மிகப்பெரிய ஒருங்கிணைந்த லூப்ரிகண்ட் வளாகத்தின் மூலம் இந்தியாவின் லூப்ரிகண்ட் உற்பத்தியை வலுப்படுத்தும்.
கிராமங்களை சிறப்பாக இணைத்தல் : 26,251 கி.மீ சாலைகள் மற்றும் 189 பாலங்கள் மூலம் கிராமங்களின் இணைப்பை மேம்படுத்துதல்
சமூகங்களை மேம்படுத்துதல்: பாதுகாப்பாக பெண்கள் நடமாட குழந்தைகள் எளிதாக பள்ளிக்கு சென்று வர மற்றும் விவசாயிகளுக்கு குறைந்த பயணச் செலவு.
வேகமான, எளிதான பயணத்திற்கு உகந்த நெடுஞ்சாலைகள்: தேசிய நெடுஞ்சாலை -81 பைபாஸ் நெரிசலைக் குறைத்து, பயணத்தை எளிமையாகவும், இனிதாகவும் மாற்றி அமைக்கும்.
வலுவான ரெயில் இணைப்பு: தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் தெலுங்கானாவில் உள்ள பயணிகளுக்கு, ஐந்து புதிய ரெயில் சேவைகள் மூலம் எளிதான பயண இணைப்பு கிடைக்கும்.