நண்பரை காப்பாற்றிய கல்லூரி மாணவர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கினார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கல்லூரி மாணவர்
லால்குடி அருகே சாத்தமங்கலம் அரண்மனைமேடு பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் - பஞ்சவர்ணம் தம்பதியின் மகன் சரவணன் (வயது 19). இவர் குமுளூர் அரசு கலைக் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில்,நேற்று மதியம் சரவணன் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் ரியாஸ் (15), ஸ்ரீதர் மகன் தருண் (16), தவமணி மகன் பிரகதீஸ் (19), சிவக்குமார் மகன் சுரேந்தர் (16) ஆகியோருடன் லால்குடி அருகே உள்ள அன்பில் மங்கம்மாள்புரம் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க சென்றார்.
இந்த நிலையில் ஆழமான பகுதிக்கு சென்ற ரியாஸ் சுழலில் சிக்கி உயிருக்கு போராடினார். இதை கண்ட சரவணன் துணிச்சலாக சென்று சரவணனை காப்பாற்றினார். ஆனால் சரவணன் புதை மணலில் சிக்கி ஆற்று தண்ணீரில் மூழ்கினார்.
தேடும் பணி தீவிரம்
இதை கண்ட நண்பர்கள் உடனடியாக லால்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சரவணை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை. தொடர்ந்து படகு மூலம் மாணவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இரவு நேரம் ஆகியதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.