தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் ரூ.8 லட்சம் கோதுமை திருட்டு

தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் ரூ.8 லட்சம் கோதுமை திருட்டு தொடர்பாக இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியிலுள்ள தனியார் உணவு நிறுவனத்தில் ரூ.8 லட்சம் மதிப்பிலான கோதுமை திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தனியார் உணவு நிறுவனம்

திண்டுக்கல்லை சேர்ந்தவர் யோகேஷ் விசுவநாதன் (வயது 39). இவர் அங்குள்ள ஒரு தனியார் உணவு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது நிறுவனத்துக்கு தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் குடோனில் இருந்து 10 லோடு கோதுமை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இதில் ஒரு லாரியில் இருந்த சுமார் 32 டன் கோதுமையை சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இறக்காமல் திருடி வேறு பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.8 லட்சம் என்று கூறப்படுகிறது.

2பேர் மீது வழக்கு

இது குறித்து அறிந்த யோகேஷ் விசுவநாதன் தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் தனியார் குடோன் பொறுப்பாளராக பணியாற்றிய திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரத்தை சேர்ந்த ரிச்சர்டு, செங்குறிச்சியை சேர்ந்த பாலசபரி செல்வராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.