தமிழக செய்திகள்

சூளகிரி அருகே காட்டு யானை தாக்கி 2 விவசாயிகள் பலி: உடலுடன், பொதுமக்கள் சாலை மறியல்

சூளகிரி அருகே காட்டு யானை தாக்கி 2 விவசாயிகள் பலியாயினர். அவர்கள் உடலுடன், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே புலியரசி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 28). ஜோகீர்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (40). 2 பேரும் விவசாயிகள். இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் ஏ.செட்டிப்பள்ளியில் உள்ளது. நேற்று காலை 2 பேரும் தங்களின் விவசாய நிலத்திற்கு நடந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் புதர் மறைவில் இருந்து ஒரு காட்டு யானை 2 பேரையும் துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் முனிராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

ராஜேந்திரன் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றி அறிந்து ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் முனிராஜின் உடலுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் முருகன் எம்.எல்.ஏ., பூவிதன், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது, யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இறந்து போன முனிராஜிக்கு திருமணமாகி சரோஜா என்ற மனைவி உள்ளார். அதேபோல ராஜேந்திரனுக்கு சிவகாமி என்ற மனைவியும், சதீஸ் என்ற மகனும், ராஜேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.

SCROLL FOR NEXT