தமிழக செய்திகள்

விநாயகரை வணங்கி சென்ற காட்டு யானை

பண்ணாரி மாரியம்மன் கோவில் அடுத்து 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது.

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தைப்புலிகள், கரடிகள், காட்டு யானைகள் என பல்வேறு வனவிலங்குகள் காணப்படுகின்றன. இதில் தண்ணீர் மற்றும் உணவு தேடி காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவது தொடர்கதையாகி வருகிறது. இந்தநிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று விநாயகரை வணங்கி சென்ற சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

பண்ணாரி மாரியம்மன் கோவில் அடுத்து 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதையின் அடிவாரத்தில் விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. விநாயகர் கோவிலுக்கு நேற்று முன்தினம் வாகன ஓட்டி ஒருவர் லாரியில் வந்தார். லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு விநாயகருக்கு தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டு சென்றார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று விநாயகர் கோவிலுக்கு வந்தது.

இதைப்பார்த்த அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் அச்சத்தில் உறைந்துபோனார். ஆனால் யானை யாரையும் தொந்தரவு செய்யாமல் விநாயகரை துதிக்கையை தூக்கி வணங்கியது. பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்துவிட்டது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்தனர். இந்த காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.