சென்னை,
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க உயர்கல்வித்துறை சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் கடந்த நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அலுவலகத்தில் அவர் விசாரித்து வருகிறார்.
முதலில் அண்ணா பல்கலைக்கழக ஆவணங்களை கேட்டார். அதன்படி, பல்கலைக்கழக பதிவாளர் சில ஆவணங்களை ஒப்படைத்தார். அந்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி கலையரசன், தொடர்ந்து புகார் அளித்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். அந்த வகையில் புகார் குறித்து துணைவேந்தர் சூரப்பா விசாரணைக்கு அழைக்கப்படுவாரா? என நீதிபதி கலையரசனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சூரப்பாவை அழைத்து விசாரிப்பது தொடர்பாக பிப்ரவரி மாதம் முதல் வாரத்துக்கு பிறகு தான் முடிவு செய்யப்படும். விசாரிப்பது பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. அண்ணா பல்கலைக்கழகம் சில ஆவணங்களை இதுவரை கொடுக்கவில்லை. விசாரணைக்கு கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் நடத்தி முடித்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று கூறினார்.