சென்னை
சென்னையில் இன்று காலை திடீரென வானிலை மாறியது. காலையில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்த நிலையில், பிற்பகல் சிறிது பலமாக மழை பெய்தது. கிண்டி, எழும்பூர், சென்ட்ரல், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழையும், அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு.
கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு . கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 8-செ.மீ மழையும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 7-செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
புதுக்கோட்டை அறந்தாங்கி, கன்னியாகுமரி இரணியல், ராமநாதபுரம் தொண்டி,நாகர்கோவில் மற்றும் சின்னக்கல்லாரில் 5 செமீ மழையும், வால்பாறை, குன்னூர், குளச்சல், நீலகிரியில் 4 செமீ மழையும் பதிவாகியுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.