சென்னை
அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 2001-ம் ஆண்டிலேயே பல துறைகளில் டிஜிட்டல் முறையை அதிமுக அரசு கொண்டுவந்துவிட்டது. டிஜிட்டல் முறையை கொண்டு வருவேன் என கமல் தற்போது பேசுவது வேடிக்கையாக உள்ளது. கமலுக்கு வரலாறு தெரியவில்லை என்றால், என்னை தொலைபேசியில் அழைத்து தெரிந்துகொள்ளலாம்.
குற்ற மனப்பான்மை கொண்டவர்களுக்கே கமிஷன் நினைவுக்கு வரும். லஞ்சம், ஊழல் என்ற சொற்கள் உருவானதே திமுக ஆட்சியில்தான். அதிமுக ஆட்சியில் எந்தவிதமான ஒப்பந்தமாக இருந்தாலும் வெளிப்படையாக நடைபெறுகிறது.
எனவே ஊழல் நடைபெறுகிறது என பொதுவாக விமர்சிப்பது சரியல்ல. குறிப்பிட்டு எதில் ஊழல் நடக்கிறது என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். அதைவிடுத்து பொதுவாக விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இருந்தால், நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு தொடரட்டும் என ஜெயக்குமார் தெரிவித்தார்.
கனத்த இதயத்தோடுதான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது; பேருந்து கட்டண உயர்வு தவிர்க்க முடியாது.
அரசியலில் யார் வேண்டுமானாலும் குதிக்கலாம்; ஆனால் கரை சேர்வார்களா என்பதே முக்கியம் இவ்வாறு அவர் கூறினார்.
#Jayakumar #BusFareHike