தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த இரங்காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த லட்சுமி (50) என்பவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த வஜ்ரவேல் மகன் குமரவேல் என்பவருக்கும் லட்சுமிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த குமரவேல் இரவு நேரத்தில் லட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பென்னாகரம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, லட்சுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், குமரவேலை கைது செய்தனர்.
விசாரணையில் லட்சுமியை வெட்டிக்கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த லட்சுமிக்கு ஒரு மகள் உள்ளார். அவர் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.