சென்னை,
மகளிர் தினத்தை முன்னிட்டு, 8-ந்தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிவித்துள்ளார்.
அதே சமயம், த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் நாளை(7-ந்தேதி) மாலை 3 மணியளவில் மாமல்லபுரத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்கான அனுமதிச் சீட்டு இல்லாத கட்சியினரும், மக்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கழகத் தலைவர் விஜய் பங்கேற்கும் மகளிர் தின விழா, நாளை (07.03.2026) சனிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாமல்லபுரம் போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில் நடைபெற உள்ளது. இந்த மகளிர் தின விழாவில், சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிருக்கான திட்டங்கள் குறித்துக் விஜய் அறிவிக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பவர்களுக்கு QR குறியீட்டுடன் கூடிய நுழைவு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இல்லை.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் வரும் 8ஆம் தேதியன்று, (08.03.2026) கழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் தின விழா கொண்டாடப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.