தமிழக செய்திகள்

உலக மரபு வாரம்: மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க இன்று இலவச அனுமதி

உலக மரபு வாரத்தையொட்டி மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக கண்டுகளிக்கலாம் என மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

சென்னை,

சர்வதேச நாடுகளில் உள்ள சரித்திர கால பாரம்பரிய கலைச்சின்னங்கள் அந்த பகுதியின் பழமை, கலாசாரம், வாழ்க்கை முறையை உணர்த்துகின்றன. அத்தகைய கலை சின்னங்களை வருங்கால தலைமுறையினர் அறியவும், அவற்றின் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் அவற்றை பாதுகாப்பது குறித்து ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் மத்திய தொல்லியல் துறை சார்பில் நவம்பர் மாதம் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை உலக மரபு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

அதன்படி உலக மரபு வார விழா நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மட்டும் இலவசமாக கண்டுகளிக்கலாம் என மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

மாமல்லபுரம் பாரம்பரிய சின்னங்களை கண்டுகளிக்க உள்நாட்டு பயணிகளுக்கு நபர் ஒருவருக்கு ஆன்லைன் நுழைவு கட்டணம் மூலம் ரூ.35-ம், வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.650-ம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT