உலக மக்கள்தொகையை கட்டுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 11-ந் தேதி மக்கள்தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்ஒரு பகுதியாக திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நேற்று உலக மக்கள்தொகை தினம் கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அரசு மருத்துவக்கல்லூரி டீன் நேரு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் குடும்ப நல துணை இயக்குனர் ஸ்ரீபிரியா தேன்மொழி, நலப்பணிகள் துணை இயக்குனர் லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.