தமிழக செய்திகள்

காதல் திருமணம் செய்த ஒன்றரை மாதத்தில் இளம்பெண் தற்கொலை - போலீசார் விசாரணை

குடும்ப தகராறில் காதல் திருமணம் செய்த ஒன்றரை மாதத்திலேயே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள சோழாம்பூண்டி இந்திரா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் தீபவள்ளி (19 வயது). இவரும், கண்டாச்சிபுரம் தாலுகா சென்னகுணத்தை சேர்ந்த முருகவேல் மகன் மகேஸ்வரன் (27 வயது) என்பவரும் காதலித்து வந்தனர். இதனிடையே கடந்த 28.1.2026 அன்று அவர்கள் இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மகேஸ்வரன் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கணவரிடம் சண்டை போட்டு கோபித்துக் கொண்ட தீபவள்ளி, மின்விசிறியில் துப்பட்டாவினால் தூக்குப்போட்டு கொண்டார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக தீபவள்ளியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள முகையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே தீபவள்ளி இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது உடல், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது.

இதுகுறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கோட்டாட்சியரின் விசாரணைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இளம்பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் தீபவள்ளியின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உறவினர்கள், தீபவள்ளியின் சாவுக்கு காரணமான அவரது கணவரை கைது செய்ய வேண்டும் என்றனர். அதற்கு போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தீப வள்ளியின் உடலை பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாங்கிச் சென்றனர்.

Also read:ஈரான், இஸ்ரேலுடன் உள்ள நல்லுறவினை பயன்படுத்தி போர் நிறுத்தம் ஏற்பட இந்தியா வழிவகுக்க வேண்டும் - சீமான்