சென்னை,
சென்னை ஓட்டேரி பகுதியில் முன்விரோதம் காரணமாக வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஓட்டேரி எஸ்.வி.எம். நகர் ஐ-பிளாக்கை சேர்ந்த நாகராஜ் மகன் அஜய் (வயது 20). இவர் 'பலிஆடு' என்ற பெயரிலும் அழைக்கப்பட்டு வந்தார். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, ஓட்டேரியை சேர்ந்த காஜல் என்ற திருநங்கையை பைக்கில் அழைத்து வந்து, ராமதாஸ்நகர் சி-பிளாக்கில் இறக்கிவிட்டு திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ராமதாஸ்நகர் பி-பிளாக் அருகே 2 பைக்குகளில் வந்த 4-க்கும் மேற்பட்டோர் அஜயை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அஜய், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் ஓட்டேரி பகுதியில் பதுங்கி இருந்த ஓட்டேரி எஸ்.வி.எம். நகர் சி-பிளாக்கை சேர்ந்த அருண்(எ) அருண்ராஜ்(27), தனுஷ்(22), தமிழரசன்(29), சிவா(23), சுனில்(எ) சூர்யா(20) மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவன் ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள 3 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும், கொலை செய்யப்பட்ட அஜய், தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் 'சி' வகை சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் போலீசார் தெரிவித்தனர்.