தமிழக செய்திகள்

தோழி கண்முன்னே இளைஞர் வெட்டிக்கொலை - சென்னையில் பரபரப்பு

பிரகாஷை அவரது தோழியின் கண்முன்னே சரமாரியாக வெட்டிவிட்டு 4 பேரும் அங்கிருந்து தப்பியோடினர்.

சென்னை,

புதுச்சேரியை சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞர், தனது பெண் தோழி ஒருவருடன் சென்னை அசோக் நகர் பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்தார். பின்னர் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு 4 பேர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.

அவர்கள் 4 பேரும் தாங்கள் கொண்டு வந்திருந்த ஆயுதங்களை வைத்து பிரகாஷை அவரது தோழியின் கண்முன்னே சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக பிரகாஷுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பெண் தற்போது தலைமறைவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.