தமிழக செய்திகள்

விஜய் பதவியேற்பு எப்போது? சற்று நேரத்தில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தால் உடனடியாக பதவியேற்க விஜய் திட்டமிட்டுள்ளார்.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்ட த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது. த.வெ.க. தலைவர் விஜய், தனது தேர்தல் பிரசாரத்தின்போது கூறியது போலவே சொல்லி அடித்து ஜெயித்து காட்டியிருக்கிறார். தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க குறைந்தது 118 தொகுதிகள் அவசியம். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் த.வெ.க. அதிகபட்சமாக 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இருந்தாலும், தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் த.வெ.க.வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார்.

அதன்படி, விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று, கவர்னர் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். தற்போது 5 எம்.எல்.ஏ.க்களுடன் இருக்கும் காங்கிரஸ் கட்சி நிபந்தனையுடன் ஆதரவு அளித்துள்ளது. 113 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.

தமிழக கவர்னரை சந்தித்து விஜய் உரிமை கோரியுள்ள நிலையில், கவர்னரிடம் இருந்து எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பான்மையை நிரூபிக்க விஜய் 2 வாரம் அவகாசம் கேட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் கவர்னர் எத்தனை நாட்கள் அவகாசம் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்கும் நிலையில், நாளை பதவியேற்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நேரு அரங்கத்தில் நடைபெற்று வருகின்றன. ராகுல் காந்தி இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.