கச்சிராயப்பாளையம்,
விழுப்புரம் மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி பிரியங்கா (வயது 27). இவர் நேற்று முன்தினம் இரவு தனது கணவருடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்திருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சிலம்பரசன் வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் அந்த வாலிபர் தூங்கிக் கொண்டிருந்த பிரியங்காவின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றார்.
இதில் திடுக்கிட்டு எழுந்த பிரியங்கா தாலி சங்கிலியை இறுக பிடித்துக் கொண்டார். அப்போது அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி பிரியங்காவை மிரட்டி தாலி சங்கிலியை பறித்தார். இதையடுத்து அவர் திரும்பிய போது, சுதாரித்துக் கொண்ட பிரியங்கா அந்த வாலிபரை காலால் உதைத்து கீழே தள்ளினார். உடனே அந்த வாலிபர் தான் பறித்த தாலி சங்கிலியை கீழே போட்டு விட்டார்.
இருப்பினும் பிரியங்கா அந்த வாலிபரை மீண்டும் தாக்கி வீட்டில் இருந்து விரட்டியடித்தார். இதற்கிடையே சத்தம் கேட்டு வந்த சிலம்பரசன் மற்றும் அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை விரட்டிச் சென்றனர். இருப்பினும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து பிரியங்கா கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாலி சங்கிலியை பறித்த கொள்ளையனை, பெண் துணிச்சலுடன் விரட்டியடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.