மதுரை,
மதுரை தொகுதி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் மதுரை மருத்துவக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு வந்து அறையில் வைக்கப்பட்டன. அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் 3 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவில் கலெக்டர் அனுமதியின்றி பெண் ஒருவர், அந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறைக்குள் சென்றதாகவும், அவர் அந்த அறையில் இருந்த ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் தகவல் பரவி திடீர் சர்ச்சையானது. இதை அறிந்ததும் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வெங்கடேசன் தனது ஆதரவாளர்களுடன், மதுரை மருத்துவக்கல்லூரிக்கு வந்தார்.
பெண் ஒருவர் அத்துமீறி சென்றது பற்றி, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகளிடம் கேட்டதற்கு முறையாக பதில் கூறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு மைய அதிகாரிகளுக்கும், வேட்பாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவருடைய ஆதரவாளர்கள் ஏராளமானோர் மதுரை மருத்துவக்கல்லூரி முன்பு திரண்டனர். திடீரென்று சாலையில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதே போல் அ.ம.மு.க. வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் ஆதரவாளர்களுடன் அங்கு வந்தனர். பத்திரிகையாளர்களும் திரண்டனர்.
கலெக்டர் வந்து விளக்கம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர். பின்னர் மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன் அங்கு வந்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், சிசிடிவி மற்றும் காவல் துறையின் பாதுகாப்பில் மின்ணணு இயந்திரங்கள் பத்திரமாக உள்ளது. மின்ணணு வாக்குப்பதிவு அறைகள் அனைத்தும் முழு பாதுகாப்பில் உள்ளன. பெண் அதிகாரி சென்ற அறை வாக்கு இயந்திரங்கள் உள்ள அறை இல்லை. இருப்பினும் அந்த அறைகளும் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் பார்வையிட்டு பாதுகாப்பு குறித்து முழு திருப்தி தெரிவித்துள்ளனர். உரிய விசாரணை நடத்தப்பட்டு அனுமதியின்றி உள்ளே சென்றவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.