புதுடெல்லி,
கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக மக்களவையில் கடந்த 6-ந்தேதி விவாதம் நடந்தது. அப்போது கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களான டீன் குரியகோஸ், டி.என்.பிரதாபன் ஆகிய இருவரும் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியை மிரட்டும் தொனியில் கோஷமிட்டனர்.
இதற்கு மன்னிப்பு கேட்குமாறு அன்றைய தினமே பா.ஜனதா எம்.பி.க்கள் வலியுறுத்தினர். ஆனால் அன்று அமளியால் சபை ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் நேற்று மீண்டும் மக்களவையில் விஸ்வரூபமெடுத்தது.
காங்கிரஸ் எம்.பி.க்கள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவர்கள் மீது இடைநீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வர அரசுக்கு விருப்பமில்லை என்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இது ஒன்றும் எந்த அரசரின் அரண்மனையும் கிடையாது. நாட்டின் சாதாரண மக்களின் பிரச்சினையை எழுப்பவும், விவாதிக்கவும் உரிய இடம்தான் இது. எங்களை மிரட்டுவதற்கு யாரும் முயல வேண்டாம். யாருக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் இருவரையும் இடைநீக்கம் செய்யுமாறு சபாநாயகரிடம் அரசு சார்பில் புகார் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.