செய்திகள்

நீதிமன்ற உத்தரவுப்படி குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தல்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே நீதிமன்ற உத்தரவுப்படி குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் கணேசன், தமிழக மக்கள் புரட்சி கழகத்தை சேர்ந்த அரங்க.குணசேகரன் ஆகியோர் தலைமையில் தெருவாசிகள் கலெக்டர் (பொறுப்பு) மணிமேகலை யிடம் ஒரு மனு கொடுத்த னர். அதில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் உள்ளது பறையாக்குளம். இந்த குளத்தை 4 பேர் ஆக்கிரமித்துள்ளனர். இதனை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர் போராட்டம்

ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இந்த நிலையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றுவதாக கூறினார்கள். பின்னர் அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் கொடுத்து விட்டு அகற்றுவதாக கூறுகிறார்கள். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதை மீறி செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் தயங்குவது ஏன்? என்று தெரிய வில்லை. எனவே உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குடிமராமத்து பணி பாதியில் நிறுத்தம்

தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த வரகூரை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் ராம் மற்றும் பூவரசன் வாய்க்கால் விவசாயிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பூவரசன் வாய்க்காலில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. ரூ.6.5 லட்சத்தில் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது மழை பெய்ததால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு இதர பணிகள் கோடை காலத்தில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது நிறுத்தப்பட்ட பணிகளை முடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இதுவரை நடந்த பணிகளால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. 1000 ஏக்கர் பாசனம் பெறும் 5 கிராமங்களை உள்ளடக்கிய பாசன பரப்பு வானம் பார்த்த பூமியாக மாறி விட்டது. எனவே அதிகாரிகள் பாசன நீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.