செய்திகள்

நெல்லையில் பரபரப்பு பிரபல சுவிட் கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

பாளையங்கோட்டையில் உள்ள பிரபல சுவிட் கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

நெல்லை,

பாளையங்கோட்டையில் உள்ள பிரபல சுவிட் கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதனால் நெல்லையில் பெரும்பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

பிரபல சுவிட் கடை

பாளையங்கோட்டை பிரபலமான ஒரு சுவிட் கடை உள்ளது. இந்த கடைகளுக்கு பல இடங்களில் கிளைகளும் உள்ளன. இந்த கடைகளில் தினமும் அதிக அளவில் அல்வா மற்றும் இனிப்பு பண்டங்கள், காரங்கள் விற்பனை செய்யவதாக வருமானவரித்துறையினருக்கு தகவல் வந்தது.

இதன் பேரில் நேற்று மதியம் 2 மணிக்கு வருமானவரித்துறை அதிகாரிகள், அந்த சுவிட் கடைக்கும், அதன் கிளை அலுவலகங்களுக்கும் சென்று சோதனை நடத்தினார்கள். பின்னர் அந்த கடையில் நடைபெறுகின்ற விற்பனையையும் வருமானவரித்துறையினர் கண்காணித்தனர். மேலும் உரிமையாளரின் வீடுகளிலும் சோதனை நடத்தினார்கள்.

சோதனை

இந்த வருமான வரிசோதனையில் முக்கிய ஆவணங்கள், பணங்கள் சிக்கியதாக என்று தெரியவில்லை. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் எந்த தகவலும் சொல்ல மறுத்துவிட்டனர். மதியம் 2 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 8 மணி வரை நடந்தது. சோதனை நடந்தாலும் கடையில் வழக்கம் போல் விற்பனையும் நடந்தது.

நெல்லையில் வருமான வரித்துறையினர் கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருவது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் ஊறுகாய் கடை, நேற்று சுவிட் கடை என வருமானவரித்துறையினரின் சோதனை நடத்தியது பெரும்பரபரப்பாக உள்ளது.