விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என 3 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்து அடுத்த மாதம் (ஜூன்) பள்ளிகள் திறக்கப்பட்டு 2019-20-ம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் நடைபெற இருக்கிறது. வகுப்புகள் தொடங்கியதும் மாணவ- மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பாடப்புத்தகங் கள் வழங்கப்பட உள்ளது.
இதற்காக அரசு பாடநூல் கழகத்தின் மூலம் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அச்சகத்தில் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அவை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 4 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து லாரிகள் மூலம் விழுப்புரத்துக்கு கொண்டு வரப்பட்டன. இந்த லாரிகள் விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்தன. பின்னர் இங்கிருந்து திண்டிவனம், கள்ளக்குறிச்சி, செஞ்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு புத்தகங்கள் பிரித்து அனுப்பப்பட்டன. விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் உள்ள மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காக விழுப்புரம் காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புத்தகங்கள் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வழங்குவதற்காக தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் முதல் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த புத்தகங்கள் அனைத்தும் அந்தந்த பள்ளிகளுக்கு 2 வாரத்திற்குள் அனுப்பி வைக்கப்படும். ஜூன் மாதம் பள்ளிகள் திறந்தவுடனேயே மாணவ- மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என்றார்.