பெண்ணாடம்,
பெண்ணாடம் அருகே உள்ள கோனூரை சேர்ந்தவர் சாந்தப்பன். இவரது மனைவி பூங்கோதை (வயது 61). இவர் சம்பவத்தன்று இரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் அவரது வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர், பூங்கோதையின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றார்.
இதில் திடுக்கிட்டு எழுந்த அவர் திருடன் திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த மர்மநபர், பூங்கோதையின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே அப்பகுதி மக்கள் திரண்டு வந்து பார்த்த போது, பூங்கோதையின் வீட்டின் இருபுறமும் உள்ள வீடுகளின் கதவுகள் வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந் தது. அப்போது தான் மர்மநபர் பக்கத்து வீடுகளுக்கு பூட்டு போட்டு விட்டு பூங்கோதையின் வீட்டுக்குள் நுழைந்து நகையை பறித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவரது மகன் மணிகண்டன், பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.