தலைப்புச் செய்திகள்

லிபியாவில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து; 53 அகதிகள் பலி

லிபியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற அகதிகள் பயணம் செய்த படகு நடுக்கடலில் கவிழ்ந்தது.

திரிபோலி,

ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டு போர்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் வெளியேறி அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைவது வாடிக்கையாகியுள்ளது. அந்த வகையில், ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, காம்பியா மற்றும் செனகல் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட அகதிகள், ஒரு சிறிய ரப்பர் படகில் லிபியாவின் கடற்கரையிலிருந்து புறப்பட்டனர்.

இத்தாலி கரையை அடையும் நோக்கில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட அவர்களின் படகு, புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. அப்போது நடுக்கடலில் திடீரென ஏற்பட்ட ராட்சத அலைகள் மோதியதில் படகு தலைகீழாக கவிழ்ந்தது. இதில் படகில் பயணம் செய்த 53 பேர் உயிரிழந்தனர். 40 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.