விருதுநகர்,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், திமுக தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் விருதுநகரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறியதாவது,
விருதுநகர் என்றாலே பெருந்தலைவர் காமராஜர்தான் நினைவுக்கு வருவார். விருதுநகரில் மாநாடு நடத்தினால் அடுத்த தேர்தலில் திமுக வெற்றிபெறுவது உறுதி.
இளைஞரணியை தொடங்கியபோது விருதுநகரில் எனது காலடித்தடம் பதியாத இடமே கிடையாது.
நம்பிக்கையாக இருக்கும் உங்களை பார்க்கும்போது எனது நம்பிக்கைக்குமே உற்சாகம் வருகிறது.
விருதுநகரில் 2004ல் தென்மண்டல மாநாடு நடத்தினோம். தேர்தலில் 40க்கு 40ல் வெற்றிபெற்றோம். 2019ல் பரப்புரையை தொடங்கி வெற்றிபெற்றோம்.
திமுக மாநாடு வாரம் வாரம் நடக்கக்கூடியதாக மாறிவிட்டது. இம்மாதம் மட்டும் 5 மாநாடு நடக்க உள்ளது.
7வது முறையாக திமுக ஆட்சிமைக்கும். தேர்தலில் மெத்தனமாக இருக்கக்கூடாது. இன்னும் பல நூற்றாண்டுகள் ஆனாலும் திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டுப்பார்க்க முடியாது.
தமிழுக்கு பல்வேறு கால கட்டங்களில் ஆபத்து வந்தபோது போராடி தந்துள்ளோம். இன்றைக்கும் இந்தியை திணிக்கும் ஆபத்து தலைக்குமேல் கத்திபோல் தொங்கிக்கொண்டிருக்கிறது.
சாதனைகளில் தமிழ்நாட்டிற்கு நிகர் தமிழ்நாடுதான். அனைத்து துறையிலும் நம்பர் 1 மாநிலமாக இருந்தாலும் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒன்றும் கொடுக்கவில்லை.
எடப்பாடி பழனிசாமி என்.டி.ஏ. பழனிசாமியாக மாறிவிட்டார். நானும் ரவுடிதான் என்பதுபோல் நான் தான் கூட்டணிக்கு தலைமை என எடப்பாடி பழனிசாமி புலம்பிக்கொண்டிருக்கிறார். தனக்கு பதவி கொடுத்தவர்களேயே எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு நீக்கினார். தேர்தலில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை அடையப்போகிறது
என்றார்.