தலைப்புச் செய்திகள்

திருப்பூர் - லாரி மீது கார் மோதி விபத்து; 2 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.

திருப்பூர்,

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (50) மற்றும் கேரளாவை சேர்ந்த ராகேஷ்(41). இவர்கள் இருவரும் பெருந்துறை அருகே உள்ள தேங்காய் எண்ணை நிறுவனத்தில் அலுவலகப் பணியாளராக பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் கோவையில் இருந்து பெருந்துறை நோக்கி வாடகை காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசி- புதிய திருப்பூர் சேலம் கொச்சி புறவழிச்சாலை அருகே வந்த போது, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி திடிரென நிறுத்தியது.

இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மணிவண்ணன், ராகேஷ் இருவரும் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இருவரது உடலையும் மீட்ட பெருமாநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.