செய்திகள்

ஓசூர் அருகே வாகன சோதனை: காய்கறி வியாபாரியிடம் ரூ.3¼ லட்சம் பறிமுதல்

ஓசூர் அருகே வாகன சோதனையின் போது காய்கறி வியாபாரியிடம் இருந்து ரூ.3¼ லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அதிகாரிகள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாகலூர் சாலையில் உள்ள தாசிரிப்பள்ளி கூட்டு ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி அரியலிங்கம் மற்றும் அலுவலர்கள், போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணம் இன்றி ரூ. 3 லட்சத்து 33 ஆயிரம் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காரில் வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் அவர் தாசிரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(வயது 48) என்பதும், காய்கறி வியாபாரியான இவர், காய்கறிகளை விற்று வசூலான தொகையை கொண்டு சென்றதும் தெரியவந்தது. ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் ஆவணத்தை காண்பித்து விட்டு பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு அவரிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.