தஞ்சாவூர்,
தஞ்சையில் உலக மகளிர் தினத்தையொட்டி 1,000 பெண்கள் பங்கேற்ற மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து ராசா மிராசுதார் மருத்துவமனை வரை இந்த மனித சங்கிலி நடைபெற்றது. பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த மனிதசங்கிலி நடைபெற்றது.
தஞ்சை இன்னர்வீல்சங்கம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி, குந்தவை நாச்சியார் கல்லூரி, பான் செக்கர்ஸ் கல்லூரி, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், மருதுபாண்டியர் கல்லூரி, உமாமகேசுவரனார் கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, திருவையாறு அரசினர் கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி, தஞ்சை மருத்துவ கல்லூரி செவிலியர் பள்ளியை சார்ந்த மாணவிகள், ரோட்டரி சங்கங்கள், அரிமா சங்கங்கள், ஜே.சி.ஐ. சங்கங்கள், கவின்மிகு தஞ்சை இயக்கம், நகரத்தார் சங்கம், ஜனசேவா சங்கம், மக்கள் சக்தி இயக்கம், தன்னம்பிக்கை விழுதுகள், செஞ்சிலுவை சங்கம் மற்றும் பல்வேறு சங்கங்களை சர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
பெரியகோவில் குடமுழுக்கு
பின்னர் நடந்த மகளிர் தின விழாவில் தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற உதவிய அரசு மகளிர் அலுவலர்களுக்கான சாதனை பெண்மணி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு இன்னர்வீல் சங்க தலைவர் ஜாய்ராயன் தலைமை தாங்கினார். கல்லூரி கல்வி இணை இயக்குனர் உஷா முன்னிலை வகித்தார். டாக்டர் ராதிகா மைக்கேல் வரவேற்றார்.
விழாவில் தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமீனாட்சி, கோட்டாட்சியர் வேலுமணி, மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் குமுதா லிங்கராஜ், அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. விழாவில் தன்னார்வ சேவையாற்றியவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழை தமிழ்நாடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் விஜயகவுரி வழங்கினார்.
விழாவில் இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் விஜயா சுவாமிநாதன், சுந்தரிசுப்பிரமணியம், அலமேலுசிதம்பரம், ராஜராணிதர்மராஜ் மற்றும் ஷிபிலா மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். முடிவில் அபிராமசுந்தரி நன்றி கூறினார்.