உலக செய்திகள்

பாகிஸ்தான்: இலவச ரேஷன் பொருட்களை வாங்க குவிந்த மக்கள் - கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.

லாகூர்,

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் கிடைக்கப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் கராச்சி மாகாணம் சிந்து தொழிற்பேட்டை பகுதியில் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. அந்த ரேஷன் பொருட்களை வாங்க நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

அப்போது, திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக குழந்தைகள் உள்பட பலர் மயக்கமடைந்து சுருண்டு விழுந்தனர். மயங்கி விழுந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால், இந்த கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.