உலக செய்திகள்

பிலிப்பைன்சில் குறுகலான மலை இடுக்கில் லாரி கவிழ்ந்தது; 20 பேர் பலி

பிலிப்பைன்சில் குறுகலான மலை இடுக்கில் லாரி ஒன்று கவிழ்ந்ததில் 20 பேர் பலியாகி உள்ளனர்.

மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கே போலி நகர் அருகே கடற்கரை பகுதியில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு சிலர் தங்களது சொந்த ஊருக்கு லாரி ஒன்றில் திரும்பி கொண்டிருந்தனர். திடீரென அந்த லாரி குறுகலான மலை இடுக்கில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஒன்று முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகினர். தொடர்ந்து 19 பேர் காயத்திற்கு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களில் 5 பேர் உயிரிழந்தனர்.

லாரியின் பிரேக்குகள் சரியாக வேலை செய்யாததே விபத்திற்கு காரணம் என அதனை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர். விபத்திற்கான சரியான காரணம் பற்றி விசாரணை நடத்தப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.

போதிய பராமரிப்புகள் இல்லாத பேருந்துகள் மற்றும் முறையான பயிற்சி இல்லாத ஓட்டுனர்களால் அந்நாட்டில் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.

கடந்த ஜூனில், திருமணத்திற்கு முன்பு நடத்தப்படும் கலாசாரம் சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு சிலர் லாரி ஒன்றில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். மலை பாதையில் சென்ற அவர்களது லாரி திடீரென உருண்டு விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில், திருமணம் நடைபெறவிருந்த மணமகள் உள்பட அதில் பயணம் செய்த 13 பேர் உயிரிழந்தனர்.