உலக செய்திகள்

பாகிஸ்தானில் மர்ம நபர்களால் 21 பேர் படுகொலை

பாகிஸ்தானின் வடக்கு வசீரிஸ்தானில் மர்ம நபர்களால் இந்த ஆண்டில் 21 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

லாகூர்,

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் வடக்கு வசீரிஸ்தான் என்ற பழங்குடியினர் அதிகம் வசிக்க கூடிய மாவட்டத்தில் மர்ம நபர்களால் பலர் தொடர்ச்சியாக கொல்லப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.

அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்ட சூழலிலும், முகமூடி அணிந்த மர்ம நபர்களின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 19ந்தேதி கூட, வடக்கு வசீரிஸ்தானின் மீர் அலி பகுதியில் கார் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். மற்றொருவர் காயம் அடைந்துள்ளார்.

இதுபோன்ற சம்பவங்களால், நடப்பு ஆண்டில் இதுவரை 21 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இதனால், அந்த பகுதியில் வசிக்க கூடிய உள்ளூர்வாசிகள் அதிக அச்சமடைந்து உள்ளனர்.

எனினும், போலீசார் மற்றும் அரசு நிர்வாகம் கூறும்பொழுது, இந்த தாக்குதல்கள் அனைத்தும் தனிப்பட்ட மற்றும் குடும்பங்களுக்குள் ஏற்பட்ட மோதல்கள் ஆகும். அதனால் உள்ளூர்வாசிகள் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர் என தெரிவித்து உள்ளனர்.