உலக செய்திகள்

நைஜீரியாவில் லாரி கவிழ்ந்து 30 பேர் பலி

அதிக மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் கானோ மாகாணம் குவானர் பார்டே நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பல பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு டிரெய்லர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் பயணம் செய்த 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

லாரி நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதிக மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில் சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. மோசமான சாலைகள் மற்றும் போக்குவரத்துச் சட்டங்களை முறையாக அமல்படுத்தாததுதான் இதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.