லண்டன்,
இங்கிலாந்து நாட்டின் லண்டன் அருகே லெய்செஸ்டர் நகரில் அமைந்த கட்டிடம் ஒன்றில் நேற்றிரவு 7 மணிக்குமேல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
வெடிவிபத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஒரு பேரிடர் பொறுப்பு குழு ஆகியவை சென்றன. வெடிவிபத்தில் காயமடைந்த 4 பேர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கட்டிடம் முழுவதும் உடைந்து விழுந்திருக்க கூடும் என்று கூறியுள்ள தீயணைப்பு வீரர்கள், கட்டிடத்தின் உள்ளே தீயில் பலர் சிக்கி உள்ளனரா? அல்லது காயமுடன் யாரும் கிடக்கின்றனரா? என்பது தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு 3 மணிநேரத்திற்கு பின் காவல் துறை தங்களது வலைதளத்தில் இது தீவிரவாதத்துடன் தொடர்புடையது இல்லை என தகவல் தெரிவித்துள்ளது.
செய்தி ஊடகங்கள் மற்றும் ஒவ்வொருவரும் இதற்கான காரணம் பற்றி ஊக தகவல்களை வெளியிட வேண்டாம் என்றும் காவல் துறை கேட்டு கொண்டது.
இந்த வெடிவிபத்து பற்றி காவல் துறை மற்றும் லெய்செஸ்டர்ஷைர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் கூட்டு விசாரணை மேற்கொள்வர் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.