காபூல்,
ஆப்கானிஸ்தானில் ராணுவத்துக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்து வருகிற உள்நாட்டுப்போரை பயன்படுத்தி, அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளும் கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். அவர்களுக்கு எதிராக அமெரிக்கா அவ்வப்போது ஆளில்லா விமான தாக்கு தல்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் அங்கு குணார் மாகாணத்தில் மானோகி மாவட்டம், லெசாலம் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக அமெரிக்காவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு நேற்று முன்தினம் அந்தப் பகுதியில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை குறி வைத்து, அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சிக்கி ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் சிலாப் கார்ப்ஸ் பிரிவு தகவல்படி, இந்த தாக்குதலில் மற்றொரு பயங்கரவாதி படுகாயம் அடைந்ததாகவும் தெரிய வந்து உள்ளது. மேலும் இந்த தாக்குதலால், உள்ளூர் மக்களோ, அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள உள்நாட்டுப் படையினருக்கோ எந்த சேதமும் இல்லை.
இதே மாகாணத்தில் கடந்த வாரம் பாகிஸ்தான் தலீபான் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் 15 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.