உலக செய்திகள்

அபுதாபியில் இடைமறித்து அழிக்கப்பட்ட ஏவுகணை பாகங்கள் விழுந்து 5 இந்தியர்கள் படுகாயம்

அபுதாபியில் கலீபா பொருளாதார மண்டலம் பகுதியில், தாக்க வந்த ஏவுகணை ஒன்றை வான் பாதுகாப்பு சாதனங்கள் இடைமறித்து அழித்தன.

அபுதாபி

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள், தலைவர்கள், தளபதிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஈரான் நடத்தி வரும் பதிலடி தாக்குதல்களால் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதுபோன்று, அபுதாபியில் கலீபா பொருளாதார மண்டலம் பகுதியில், தாக்க வந்த ஏவுகணை ஒன்றை வான் பாதுகாப்பு சாதனங்கள் இடைமறித்து அழித்தன.

இதில் அந்த ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் சிக்கி 5 இந்தியர்கள் காயம் அடைந்துள்ளனர். மித அளவில் இருந்து படுகாயம் வரை அவர்களுக்கு ஏற்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். மற்ற தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

இதேபோன்று, அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பொதுமக்கள் பெற வேண்டும் என கேட்டு கொண்டதுடன், பரவி வரும் வதந்திகள் அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களை தவிர்க்கும்படியும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.