உலக செய்திகள்

பாகிஸ்தானில் போலீஸ் வாகனத்தை குறிவைத்து தாக்குதல்: 5 பேர் பலி, 38 பேர் காயம்

பாகிஸ்தானில் போலீஸ் வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் பலியாகினர்.

குவெட்டா,

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் போலீஸ் வாகனத்தை குறிவைத்து சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. பச்சா கான் சவுக் என்ற இடத்தில் போலீஸ் வாகனம் நிறுத்தப்பட்டு இருந்த இடத்திற்கு மிக அருகில், இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

காவல் நிலைய அதிகாரியை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். எனினும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் 2 போலீசார் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 38 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்கொலைப்படை தாக்குதலா? அல்லது ரிமோட் மூலம் வெடிக்க வைக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடப்பதாக உள்ளூர் பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

SCROLL FOR NEXT