பெஷாவர்,
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக நான்கு குழந்தைகள், ஒரு பெண் உட்பட ஏழு பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு கைபர்-பக்டுன்க்வா மாகாணத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் பலியாகினர். அந்த மாகாணத்தில் ஷங்ரில்லாவில் இருவரும் புனெ, மன்செஹ்ரா மற்றும் அபொட்டாபாத்தில் தலா ஒருவரும் பலியாகினர். ஆறு பெண்கள் உட்பட 18 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பலத்த மழை காரணமாக அந்த மாகாணத்தில் ஐந்து வீடுகள் இரண்டு குடிசைகள் மற்றும் மூன்று பள்ளி கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.
பஞ்சாப் மாகாணத்தில் இரண்டு குழந்தைகள் பலியாகி உள்ளனர். மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சர்கோதா நகரத்தில் கட்டிடத்தின் மேல் தளம் இடிந்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள் பலியாகி உள்ளனர். வடக்கு பாகிஸ்தானில் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுகிறது.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள தொடர் மழை காரணமாக பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மேலும் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி உள்ளிட்ட நகரங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.