டெஹ்ரான்,
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள், ரோலண்ட் மார்ஷல், பரிபா அதல்கா. இவர்கள் இருவரும் அறிஞர்கள் ஆவார்கள். இவர்கள் ஈரானில் இருந்தபோது, அங்குள்ள அரசுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டனர்; தேச பாதுகாப்புக்கு விரோதமாக செயல்பட்டனர் என்ற புகார் எழுந்தது. அவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், தற்போது ரோலண்ட் மார்ஷல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு, பிரான்ஸ் திரும்பி உள்ளார். இதை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உறுதி செய்துள்ளார்.
ஈரான் நாட்டில் பெர்சிய புத்தாண்டையொட்டி சிறைக்கைதிகளை விடுவிப்பது வழக்கம். எனவே இதில் அவர் விடுதலை ஆனாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அவர் கொரானா வைரஸ் தாக்கியதால் விடுவிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரோலண்ட் மார்ஷலுடன் கைது செய்யப்பட்டிருந்த மற்றொரு அறிஞரான பரிபா அதல்கா விடுவிக்கப்படவில்லை, இன்னும் சிறையில்தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஈரானின் லாரஸ்டான் மாகாணத்தின் தலைநகரான கொராம்பாத் நகர சிறையில், கைதிகளை விடுவிப்பதற்கான பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்தபோது 23 கைதிகள் சிறையில் இருந்து நைசாக தப்பி விட்டனர் என தகவல்கள் கூறுகின்றன.
தப்பிய கைதிகள் அனைவரும் ஒரு வருட கால சிறைத்தண்டனையை அனுபவித்து வந்தவர்கள் ஆவர். அபாயகரமான கைதிகள் தப்பியதாக வெளியான தகவல்களை ஈரான் அரசு தரப்பு மறுத்துள்ளது.