வாஷிங்டன் டி.சி.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானை கடுமையாக தாக்கின. அப்போது, அதன் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி அவருடைய மகள், மருமகன் என குடும்பத்தினர் பலர் கொல்லப்பட்டனர். பதிலுக்கு, ஈரானும் தாக்குதலில் ஈடுபட்டது.
வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களை பயன்படுத்தியும் தாக்குதல் நடந்தது என கூறப்படுகிறது. இதனால், குவைத், கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகள் மீதும் கடந்த காலங்களில் ஈரான் தரப்பில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஈரான் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
எனினும், இருதரப்பிலும் போரை முடிவுக்கு கொண்டு வர ஒருபுறம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனாலும், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான தாக்குதல் நிறுத்தப்படவில்லை.
இந்த சூழலில், ஈரானின் புதிய உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா காமேனியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்தித்து பேச உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி டிரம்ப் கூறும்போது, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், காமேனியே இறுதி ஒப்புதலை அளிப்பார் என்று நம்புகிறேன். அவரை விரைவில் சந்திக்க நான் ஆவலாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அயதுல்லா அலி காமேனியின் மரணத்திற்கு பின்னர், அவருடைய மகனான அயதுல்லா மொஜ்தபா காமேனி, ஈரானின் உச்ச தலைவராக நியமிக்கப்பட்டார். எனினும், இஸ்ரேல் ராணுவ தாக்குதல்களில் மொஜ்தபாவுக்கு காயங்கள் ஏற்பட்டு உள்ளன என்றும் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.