துபாய்,
இந்தியாவை சேர்ந்தவர் முகமது தாஹிர் (வயது 36). துபாயின் அபுதாபி நகரில் ஐ.டி. ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது 5 வயது மகன் முகமது ஆயன். தனது மகனுக்கு விடாமுயற்சி பற்றியும் மற்றும் சொந்த நாடான இந்தியாவின் கலாசாரம் பற்றியும் கற்று தருவதற்காகவும் அதனுடன் உலக சாதனை படைக்கவும் முகமது விரும்பி உள்ளார்.
இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் இந்தியாவிற்கு வந்து உள்ளனர். அவர்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடங்களாக அறிவிக்கப்பட்ட 7 இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். ஏறக்குறைய 300 கி.மீட்டர் தொலைவை 11 மணிநேரம், 33 நிமிடங்கள் மற்றும் 18 வினாடிகளில் கடந்துள்ளனர்.
அவர்கள் உத்தர பிரதேசத்தில் உள்ள தாஜ்மகால், ஆக்ரா கோட்டை மற்றும் பதேபூர் சிக்ரி ஆகிய இடங்களுக்கும், ராஜஸ்தானில் உள்ள கியோலேடியோ தேசிய பூங்கா மற்றும் டெல்லியில் உள்ள ஹுமாயூன் கல்லறை, செங்கோட்டை மற்றும் குதுப் மினார் ஆகிய இடங்களுக்கும் சென்றுள்ளனர்.
இதற்காக மின் ரிக்ஷாக்கள், ஆட்டோக்கள், வேன்கள், பேருந்துகள், ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில்கள் ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளனர். நடந்தும் மற்றும் ஓடியும் அந்த இடங்களை அடைந்துள்ளனர்.
அவர்கள் ரெயில் அல்லது பேருந்து ஆகியவற்றிற்காக காத்திருந்த நேரத்திலேயே ஓய்வு எடுத்துள்ளனர். அந்த நேரத்திலும் அவர்கள் ஓய்வாக இல்லாமல் உணவு எடுத்து கொள்வதற்கு பயன்படுத்தி கொண்டனர். இதுபற்றி முகமது கூறும்பொழுது, பரத்பூரில் இருந்து டெல்லி சென்ற ரெயில் பயணத்தின்பொழுது சற்று ஓய்வு எடுத்தோம். அப்பொழுது காலை உணவை எடுத்து கொண்டோம். தூங்க கூட இல்லை என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் நெதர்லாந்து நாட்டில் 2 பேர் 24 மணிநேரத்தில் இதுபோன்ற சாதனையை செய்து உள்ளனர்.