உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான்: அகதிகளை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து 22 பேர் பலி

ஓட்டுநர் தூங்கியபடி வாகனம் ஓட்டியதில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது என மாகாண பொது சுகாதார இயக்குநர் கூறியுள்ளார்.

காபூல்

பாகிஸ்தானில் இருந்து அகதிகள் சிலரை ஏற்றிக்கொண்டு ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு லாரி ஒன்று திரும்பி கொண்டிருந்தது. அப்போது, ஆப்கானிஸ்தானின் லக்மான் மாகாணத்தில், காபூல் நகரை நங்கர்ஹார் மாகாணத்துடன் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையில் அந்த லாரி திடீரென கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சிக்கி, லாரியில் இருந்த அகதிகள் பலர் காயமடைந்தனர். அவர்களில் 22 பேர் பலியாகி உள்ளனர். தவிர, 36 பேர் காயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இந்த தகவலை மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் அப்துல் மாலிக் நியாஸ் உறுதிப்படுத்தி உள்ளார்.

விபத்தில் சிக்கியவர்களில் 10 குழந்தைகள் மற்றும் 5 பெண்களும் அடங்குவர். காயமடைந்த நபர்கள் நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். ஓட்டுநர் தூங்கியபடி வாகனம் ஓட்டியதில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது என மாகாண பொது சுகாதார இயக்குநர் அமினுல்லா ஷெரீப் கூறியுள்ளார். இதுபற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.