உலக செய்திகள்

துபாய்-ஜெய்ப்பூர் இடையிலான விமான போக்குவரத்து விரைவில் தொடங்கும் - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தகவல்

துபாய்-ஜெய்ப்பூர் இடையிலான விமான போக்குவரத்து விரைவில் தொடங்கும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

துபாய்,

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

துபாயில் இருந்து ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூருக்கு இயக்கப்பட்டு வந்த விமான போக்குவரத்து கொரோனா பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு கட்டுப்பட்டு வருவதால், ஜெய்ப்பூருக்கு மீண்டும் விமான போக்குவரத்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. எனினும் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் வசதிகள் ஏற்படுத்தப்படாததால் இந்த விமான போக்குவரத்து இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தற்போது ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் விரைவில் இந்த விமான போக்குவரத்து தொடங்கப்படும். அமீரகத்துக்கு இந்தியாவில் இருந்து வருவதற்கான கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டதால், பயணிகள் அதிகமாக வருகின்றனர்.

அமீரகத்தில் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்து வருவதாலும், விரைவில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி தொடங்க இருப்பதாலும் இந்தியாவில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் துபாய், சார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பகுதிகளுக்கான விமான போக்குவரத்து தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT