Photo Credit: AFP 
உலக செய்திகள்

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவு கொரோனா பாதிப்பு உயர்வு

இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் உள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் ஏற்கனவே இருக்கும் கொரோனா வைரசை விட 70 சதவீதம் வேகமாக பரவும் என இங்கிலாந்து சுகாதார நிபுணர்கள் கூறினர். இதனை தொடர்ந்து இந்தியா உள்பட 40க்கும் மேற்பட்ட நாடுகள் இங்கிலாந்து உடனான விமான சேவையை ரத்து செய்தன.

புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதும், இங்கிலாந்தில் 4 அடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இருப்பினும் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில், இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் ஏறத்தாழ 60 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இங்கிலாந்தில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கடந்த 8 நாட்களாகவே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.