உலக செய்திகள்

உலகைச் சுற்றி...

* ஈராக்கின் தியாலா மாகாணத்தில் ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதியின் நெருங்கிய கூட்டாளி ஒருவர் உள்பட பயங்கரவாதிகள் பலர் கைது செய்யப்பட்டனர்.

* ஏமனில் தலைநகர் சனாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சவுதி கூட்டு படைகள் வான்தாக்குதல் நடத்தியபோது, பள்ளிக்கூடம் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களின் மீது குண்டுகள் விழுந்தன. இதில் சிறுவர்கள் உள்பட அப்பாவி மக்கள் 13 பேர் பரிதாபமாக இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

* ஆப்கானிஸ்தானின் 3 வெவ்வேறு மாகாணங்களில் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 14 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். அதே சமயம் ஜலாலாபாத் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.

* ஆஸ்திரேலியாவில் விலங்குகள் நல ஆர்வலர்கள் நாடு முழுவதும் நடத்திய போராட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. பலர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டம் வெட்கக்கேடானது என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட யாரும் ஆஸ்திரேலியர்கள் கிடையாது எனவும் பிரதமர் ஸ்காட் மேரிசன் கடுமையாக சாடினார்.