உலக செய்திகள்

உலகைச் சுற்றி...

* இந்தோனேசியாவில் சுனாமி தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 420–ஐ எட்டியது.

* ரஷியாவின் கோமன்டோர்ஸ்கை தீவுகளில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* வடகொரியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க மாணவர் 17 மாத சிறைவாசத்துக்கு பிறகு அமெரிக்கா திரும்பினார். சிறையில் அவர் கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்ததால் அமெரிக்கா திரும்பிய சில நாட்களிலேயே இறந்தார். இந்த விவகாரம் தொடர்பாக வடகொரியாவுக்கு அமெரிக்க கோர்ட்டு 501 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது.

* தங்கள் நாட்டுக்கு வரும்படி அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் அழைப்பு விடுத்தார். அதனை ஏற்றுக்கொண்ட டிரம்ப் விரைவில் துருக்கி செல்வார் என தெரிகிறது.

* சீனாவின் புஜியான் மாகாணத்தில் பயணிகளுடன் சென்ற பஸ்சை மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி கடத்தினார். ஆனால் அந்த பஸ் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானதில் போலீஸ்காரர் உள்பட 5 பேர் உயிர் இழந்தனர். பஸ்சை கடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

* நேபாளத்தில் கலிகோட் என்கிற மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 39 வீடுகள் தீக்கிரையாகின. இதனால் சுமார் 300க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள்.

* சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெறும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் முடிவு ஈராக்கில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என அந்நாட்டின் பிரதமர் அடல் அப்துல் மக்தி கவலை தெரிவித்துள்ளார்.