லண்டன்,
பிட்காயின் உலக அளவில் பிரபலமாகி வருகிற மெய்நிகர் பணம் ஆகும். இதை கண்களால் காண முடியாது. எனவே கையிலோ, பையிலோ வைத்துக்கொண்டு பரிமாற்றங்கள் செய்ய இயலாது. கணினியில் மட்டுமே பார்க்க முடியும். இது முற்றிலும் மின்னணு முறையிலான பரிமாற்றத்துக்கானது. ரகசிய பண பரிமாற்றங்களுக்கு அதிகளவில் பிட்காயின் பயன்படுகிறது. மெய் நிகர் பணத்தில் இந்த பிட்காயினின் பங்களிப்பு 64.6 சதவீதம் ஆகும். தற்போது இது டாலர், பவுண்ட் மாதிரி உண்மையான நாணயங்களை போலவே பரவலாக வர்த்தகம் செய்யப்படுகிறது. மிக சமீபத்தில் பன்னாட்டு பண பட்டுவாடா நிறுவனமான பேபால் நிறுவனத்துடன் பணம் செலுத்துவதற்கான ஒரு வடிவமாகவும் இது வளர்ந்து வருகிறது.
கடந்த மார்ச் மாதம் ஒரு பிட்காயின் மதிப்பு 5 ஆயிரம் டாலராக (சுமார் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம்) இருந்தது. இந்தநிலையில் இதுவரை இல்லாத வகையில் நேற்று முன்தினம் இதன் மதிப்பு அதிரடியாக 20 ஆயிரம் டாலராக (சுமார் ரூ.15 லட்சம்) உயர்ந்தது. இது பிட்காயின் மதிப்பில் புதிய உச்சம் என கூறப்பட்டது. ஆனால் நேற்று காலை 8.40 மணி நிலவரப்படி பிட்காயின் மதிப்பு 22 ஆயிரத்து 120 டாலர்கள் (சுமார் ரூ.16 லட்சத்து 59 ஆயிரம்) ஆகும். 12 ஆண்டுகளில் பிட்காயின் இதுவரை இல்லாத இந்த புதிய உச்சத்தை அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.