அபுஜா,
நைஜீரியா நாட்டில் வடமேற்கே சொகொட்டோ மாகாணத்தில் ஷாகாரி நகரில் கிடான்-மகானா கிராமம் அருகே ஷாகாரி ஆற்றில் மர படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் பெண்கள், குழந்தைகள் என பலர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அந்த படகு பதியாவா என்ற, அருகேயிருந்த மற்றொரு கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தது. ஆற்றின் நடுவழியில் சென்ற படகு திடீரென மரம் ஒன்றின் மீது மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில், படகில் இருந்த பயணிகளில் பலர் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர். இதுபற்றி உள்ளூர் அரசு தலைமை அதிகாரியான அலியு தந்தானி செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் உள்ளூர் நீச்சல் வீரர்கள் ஆற்றில் இறங்கி, தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரை 26 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. அவர்களில் 21 பேர் பெண்கள், 5 பேர் குழந்தைகள் ஆவர். படகில் எத்தனை பயணிகள் இருந்தனர் உள்ளிட்ட விவரங்களை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.