மான்செஸ்டர்,
இங்கிலாந்து நாட்டில், மான்செஸ்டர் நகரில் உள்ள அரங்கம் ஒன்றில் கடந்த 22ந் தேதி இரவு அமெரிக்க பாடகி அரியானா கிராண்டேயின் பாப் இசை நிகழ்ச்சி நடந்தபோது பயங்கரவாதி வெடிகுண்டை வெடிக்க செய்ததில் குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது. இந்த குண்டுவெடிப்பை நடத்தியவன், சல்மான் அபேதி (வயது 22) என தெரியவந்தது. விசாரணை நடத்தி வரும் பிரிட்டன் போலீஸ் சல்மான் அபேதி சகோதரன் இஸ்மாயில் உள்பட 7 பேரை கைது செய்து உள்ளது. மேலும் தாக்குதல் நடத்தலாம் என பிரிட்டன் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது.
இதற்கிடையே மான்செஸ்டர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களை பிடிக்க தேடுதல் வேட்டையும் பிரிட்டனில் தொடர்கிறது.
இந்நிலையில் மான்செஸ்டரின் டிராபோர்டில் உள்ள கல்லூரி ஒன்றுக்கு ராணுவத்தின் வெடிகுண்டு செயல் இழப்பு பிரிவு சென்று உள்ளது என போலீஸ் தெரிவித்து உள்ளது. கல்லூரியை நோக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டது. அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வளைத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. மான்செஸ்டர் குண்டுவெடிப்பின் விசாரணை தொடர்பான நடவடிக்கையா என்பதை உறுதி செய்வது இப்போதைக்கு முடியாது என போலீஸ் கூறியதாக தெரிகிறது. ஆனால் போலீஸ் தரப்பில் முழு தகவல்கள் கொடுக்கப்படவில்லை.