சாவோ பவ்லோ,
உலக நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அதிக இலக்காகி உள்ளன. இந்த நாடுகளில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை பிற நாடுகளை விட அதிகளவில் காணப்படுகிறது.
உலக அளவில் 17.6 கோடி பேர் கொரோனா பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கின்றனர். அமெரிக்காவில் கடந்த 2 தினங்களுக்கு முன் உயிரிழப்பு 6 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தியது. பாதிப்புகளும் (3.43 கோடி) அதிக அளவில் உள்ளன.
பிரேசில் நாட்டில் 1.76 கோடி பேர் பாதிப்படைந்து உள்ளனர். அந்நாடு, உயிரிழப்பு எண்ணிக்கையில் 2வது இடத்தில் உள்ளது. இதுவரை 4.9 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். பிரேசிலில், தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) சேர்ந்து சிகிச்சை பெறும் 80% பேர் கொரோனா நோயாளிகளாக உள்ளனர்.
பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் கடந்த 7 நாட்களின் சராசரியில், ஒவ்வொரு நாளும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதனால் உடல்களை தகனம் செய்வது தீராத வேதனைகளில் ஒன்றாக உள்ளது.
இவற்றில் உலக அளவில் நாள் ஒன்றுக்கு ஏற்படும் உயிரிழப்புகளில் 3ல் ஒருவர் இந்தியாவில் உள்ளனர். வளர்ந்து வரும் நாடுகளில் தகன மேடைகள் மற்றும் கல்லறைகள் போதிய இடவசதி இன்றி உள்ளன.
அதிகரித்து வரும் உயிரிழப்புகளை முன்னிட்டு பல்வேறு நாடுகளும் கல்லறைகளை விரிவாக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளன. அதற்கான கட்டுமான பணிகளையும் அந்நாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
இதுதவிர, உயிரிழப்புகள் அதிகளவில் இருக்க கூடும் என கடந்த மாதம் உலக சுகாதார அமைப்பு மதிப்பீடு செய்திருந்தது. இதனை சுட்டி காட்டி, உலக அளவில் உயிரிழப்புகள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் குறைவாக இருக்க கூடும் என பல சுகாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.